logo
இபிஎஸ், ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் படத்துடன்  சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில்  பரபரப்பு

இபிஎஸ், ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் படத்துடன் சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு

04/Feb/2021 04:37:57

புதுக்கோட்டை, பிப்: பெங்களூரிலிருந்து  வருகின்ற 7 அல்லது 8-ஆகிய  தேதியில் சசிகலா தமிழகத்துக்கு  வருவதாகக்கூறப்படும் நிலையில், அவரை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகளை  ஓட்டி வருவதால் அதிமுக தலைமை நிர்வாகிகளிடம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தை கடுமையாகப் பார்க்கும் அதிமுக  தலைமை சுவரொட்டி ஓட்டியவர்களை   கட்சியை விட்டு நீக்கும்  நடவடிக்கைகளை தீவிரம் காட்டி வருகிறது.


  கட்சியின் நிலைப்பாடு இப்படியிருந்தும் கூட, புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர்  பலர் சசிகலாவை வரவேற்று புதுக்கோட்டை மற்றும்  கறம்பகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சுவரொட்டிகள்  ஒட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 மற்ற மாவட்டங்களை விட மாறுபட்ட வகையில்  முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது புகைப்படங்களை  பயன்படுத்தி  கறம்பக்குடி பகுதியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சசிகலாவை வரவேற்று பல்வேறு இடங்களில் சுவரொட்டி அச்சடித்து ஒட்டிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இடத்தில் சலசலப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 அதேபோல் புதுக்கோட்டை நகர கழக இணைச் செயலாளராக உள்ள  பூரணம்ஆறுமுகம் என்பவர் சசிகலாவை வரவேற்று புதுக்கோட்டை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் சுவரொட்டியை  ஒட்டி உள்ளார். அதேபோல் கறம்பக்குடி யில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த ரங்கசாமி என்பவர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகைப்படத்துடன்  கழகத்தை வழிநடத்த வருகை தரும் சின்னம்மா வருக வருக என கறம்பக்குடி பகுதிகளில் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி  அப்பகுதி அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Top