logo
புதுக்கோட்டையில்  2-ஆவது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை  நிறுத்தம்

புதுக்கோட்டையில் 2-ஆவது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

18/Feb/2021 07:49:23

புதுக்கோட்டை, பிப்: புதிய பென்ஷன்  திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின்  காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோரிக்கைகள்: அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும்.

 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்.17 முதல்   தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை  2-ஆவது நாளாக தொடர்ந்தது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்  ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுக்கோட்டை தாலுகா அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் ஆகியவை பணியாளர்கள் இல்லாமல்  வெறிச்சோடி காணப்பட்டது.எங்களது கோரிக்கைகளை  நிறைவேற்ற தமிழக அரசு பேச்சு நடத்தி தீர்வு காண முன் வரவேண்டும் என்றார்  சங்க மாவட்டச்செயலர் வைரவன். 

                                                   

        


Top