logo
திமுக நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

03/Jan/2021 12:02:32

ஈரோடு: திமுக நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த சிறுவலூரில், திமுக சார்பில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக நடத்தும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களைத் தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்கிறது. கோவை கூட்டத்தின்போது, அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலின் பேரில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ஊடுருவி குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை நல்லாட்சித்துறையாக இருந்தது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை, ஊழலாட்சித்துறையாக மாறிவிட்டது.

கோபி தொகுதியில் எட்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள செங்கோட்டையன், மூத்த அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாற்றம் நடக்கிறது, என்ன அறிவிப்பு வருகிறது என்பதே அவருக்குத் தெரியாது.  செங்கோட்டையன் முன்பாக முதல்வர் பழனிசாமி கைகட்டி நின்ற காலம் இருந்தது. தற்போது பழனிசாமி முன்பாக செங்கொட்டையன் கைகட்டி நிற்கிறார். செங்கோட்டையன் ஒரு அப்பிராணி. அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்யத் தயாராக இல்லை. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தொகுதியான சிறுவலூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி கூட இல்லாததால், மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தும் நிலை உள்ளது. கடந்த 2019-இல் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், அதனைப் பிரபலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோபியில் அனைத்து வசதியையும் கொண்ட ஒரு அரசு மருத்துவமனையைக் கூட அமைக்காத செங்கோட்டையானால் எவ்வித பயனும் இல்லை என்றார். 

 கோபி தொகுதியில் வெற்றி பெற்று பல ஆண்டுகள் செங்கோட்டையன் அமைச்சராக இருந்துள்ளார். ஆனால், இங்கு அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி தொடங்கவில்லை. கொரோனா பரவல் காலத்தில் மக்களைச் சந்திக்க விரும்பவிலலை என அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அறிவிப்பு பலகை வைத்திருந்தார். உயிருக்கு பயந்து அமைச்சர் வீட்டில் முடங்கியிருந்தபோது, திமுகவினர் தான் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர் என்றனர் கூட்டத்தில் பங்கேற்ற சிலர்.

Top