17/Feb/2021 05:59:53
ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் விதிமீறிய லாரிகளை சிறைபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க போவதாக அப்பகுதி மலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும்
முக்கிய பாதையான திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழியாகத்தான் அன்றாடம் ஆயிரக்கணக்கான கனரக
வாகனங்கள் கடந்து செல்லும். 6 சக்கரங்கள் மற்றும்
16 டன் எடையளவு கொண்ட லாரிகள் மட்டுமே
செல்லவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக
செல்லும் பண்ணாரியில் உள்ள போக்குவரத்து சோதனை
சாவடி, வனத்துறை சோதனை சாவடி, காவல்துறை சோதனை சாவடி ஆகிய மூன்று சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, கூடுதல் பாரம் ஏற்றிய லாரிகளை திம்பம் மலைப்பாதையில்
அனுமதிப்பதால் தான்
அடிக்கடி விபத்து ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து
முடங்குவதாகவும் அப்பகுதியினரால்
குற்றம் சாட்டப்படுகிறது.
இத்தகைய வாகனங்களால் குறைந்தது 5 மணி
நேரம் முதல் 12 மணி நேரத்திற்கு மேலாக
போக்குவரத்து பாதிக்கப்பட்டு
பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு
காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்யாவிட்டால்
பண்ணாரி சோதனை சாவடியில் போராட்டம் நடத்தப்பபடுவதோடு
மடடுமின்றி விதி மீறி அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை சிறைப்பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக
தாளவாடியில் உள்ள மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.