16/Feb/2021 10:26:39
ஈரோடு, பிப்:ஈரோடு ஜவுளி சிறு குறு வியாபாரிகள் சங்கத்தினர் தலைவர்கள்,நூர்சேட், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு கனி மார்க்கெட் கடந்த 40 ஆண்டு காலமாக பன்னீர்செல்வம் பார்க் அருகே இயங்கி வருகிறது. பள்ளிப்பாளையம், நாமக்கல், எடப்பாடி, திண்டுக்கல் ,மதுரை, திருச்செங்கோடு, தர்மபுரி ,சிவகிரி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி சார்பில் ஐந்து மாடி அடுக்கு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அப்பணிகள் முடியும் வரை ஜவுளி வியாபாரிகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா காரணமாக ஐந்து மாதங்கள் கடையை நடத்த முடியாமல் இருந்தோம்.
நகைகளையும் வங்கிகள் மூலம் அடகு வைத்து முதலீடு பெற்று வணிகம் செய்து வந்தோம். இந்நிலையில் ஜவுளி மார்கெட் முன்பகுதியில் நிழற்குடை அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிழற்குடை அமைந்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 70 கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே புதிதாக அமைய உள்ள நிழற்குடை இங்கு அமைக்க வேண்டாம். அதற்கு பதிலாக வேறு இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.