12/Feb/2021 07:20:42
ஈரோடு, பிப்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியில் உள்ள கேஸ் வெல்டிங் தொழிலகத்தில் எதிர்பாராத விதமாக நேரிட்ட தீவிபத்தில் அங்குள்ள பொருள்கள் சேதமடைந்தன.
சத்தியமங்கலம் முனுசாமி என்பவர் கோவை சாலையில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். உரிமையாளர் சொந்த பணி காரணமாக வெளியே சென்றதால் அவரது ஒர்க் ஷாப் வெள்ளிக்கிழமை திறக்கப்படவில்லை. இந்நிலையில் மாலை சுமார் 4 மணி அளவில் கேஸ் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியதாம்.
இதைக்கண்ட அருகிலிருந்த லாரி பணிமனையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிலர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் பொதுமக்கள் மற்றும் லாரி பணிமனையில் வேலை பார்த்த அனைவரும் இணைந்து குடங்களில் தண்ணீர் ஊற்றியும் மணலை அள்ளி நெருப்பின் மீது வீசியும் தீயை அணைத்தனர்.
இறுதியாக வந்த தீயணைப்பு துறையினர் சிறிது சிறிதாக எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைத்து சென்றனர். சத்தியமங்கலம் கோவை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.