21/Jun/2021 08:07:42
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது, ரூ.50,000- ரொக்கம்,
பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை
உள்ளடக்கியதாகும். அதன்படி,
2021-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.8.2021 அன்று நடைபெறும் சுதந்திர
தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி 2021 (1.4.2021) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31ஆம் தேதி 2021 (31.3.2021) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
கடந்த நிதியாண்டில் (2020-2021) 1.4.2020 முதல்31.3.2021 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும்
முன்பு குறைந்தபட்சம் 5
வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக
இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).
மேலும் விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் 30.6.2021 அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.