logo
அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கல்யாணராமன்  தடுப்புக்காவல்  சட்டத்தில் கைது

அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கல்யாணராமன் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

12/Feb/2021 12:07:38

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜக கல்யாணராமன் தடுப்புக்காவல்  சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாஜக சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.  இவர் மீது ஏற்கெனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, பிரிவினையை உண்டாக்கும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவரது செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு இவரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. அருளரசு, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் பரிந்துரைத்திருந்தார்.

இதன்பேரில் பாஜக நிர்வாக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல், ஈரோடு சிறையில் உள்ள கல்யாணராமனிடம் அளிக்கப்பட்டது

Top