logo
தமிழகத்தில் நல்லாட்சிக்கு வழி காணும் ஆளுநர் உரை: வைகோ பாராட்டு

தமிழகத்தில் நல்லாட்சிக்கு வழி காணும் ஆளுநர் உரை: வைகோ பாராட்டு

21/Jun/2021 04:06:41

சென்னை, ஜூன்: தமிழ்நாட்டில்  நல்லாட்சிக்கு வழி காணும் வகையில் ஆளுநர் உரை அமைந்துள்ளதாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர்  வைகோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் திங்கள்கிழமை (21.6.2021) நடைபெற்ற தமிழ்நாடு 16-ஆவது சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை, பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில், மு..ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு திராவிட இயக்க அரசாக செயல்படும் என்பதற்கு கட்டியங் கூறத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கான அரசாக இந்த அரசு திகழும்; திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களான சமூகநீதி, சமத்துவம். பெண் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் திமுக அரசு உறுதியாக இருக்கின்றது.

மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலிக்கும் ஆளுநர் உரையில், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால், அரசமைப்புச் சட்டத்தின் துணை கொண்டு எதிர்ப்போம் என, ஒன்றிய அரசுக்கு உறுதியாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகள் மூலமாக, வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கவும், கூட்டாட்சிக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும் அறைகூவல் விடுத்து இருக்கின்றது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 343 -இல் திருத்தம் செய்து, தமிழ் மொழியை இந்திய அரசின் அலுவல் மொழி ஆக்கிட வழிவகை காணப்படும்; தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்புகள், தமிழ் மொழி பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது. பாழ்பட்டுப் போன பைந்தமிழ் நாட்டைச் சீரமைக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆளுநர் உரையில் அகரம் தீட்டப்பட்டு இருக்கின்றது.

மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பொருளாதார இலக்கை அடையவும் முதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பொருளாதார அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டா~ப்லோ, ஜீன் ட்ரெஸ், ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயணன் போன்றோர் இடம்பெறுவர் என்ற அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கின்றது.

தமிழ்நாட்டில் மண்டல வாரியாக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துதல், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு, அரசுத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டின் விரைவான வளர்ச்சிக்குப் பாதை அமைக்கும். மக்களுக்கு இணைய வழியில் அரசு சேவைகள் வழங்குதல், சேவைபெறும் உரிமைச் சட்டம், ஊழலை ஒழித்திட லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் வழங்குதல் போன்ற அறிவிப்புகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்யும்.

பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண, புறநகர் பகுதிகளில் துணை நகரங்கள் அமைத்தல், சென்னை மாநகர விரிவாக்கம், சிங்கார சென்னை 2.0 திட்டம் போன்றவை வளர்ச்சியைப் பரவலாக்கும் வரவேற்புக்குரிய திட்டங்கள் ஆகும்.

நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தப்பட்ட வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கை என்ற அறிவிப்பு, திமுக அரசின் வேளாண் துறை மீதான தனிக் கவனத்தை வெளிப்படுத்துகின்றது.

இயற்கை வேளாண் விளைச்சலைப் பெருக்குதல், உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டுதல், நிலத்தடி நீர் பயன்பாட்டுக்குப் புதிய சட்டம், தமிழ்நாட்டின் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.கொரோனா பேரிடரால் மூடப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் திறக்கவும், தொழிற்சாலைகள் சீராக இயங்கவும் மீட்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

சென்னை - பெங்களூரு பெருவழித் தடத்தில் தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், வட மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சி வரவேற்கத்தக்கது. தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு தென்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற கோரிக்கை செயல் வடிவம் பெற வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற புதிய சட்ட முன்வடிவு நீதிபதி .கே.ராஜன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும் என்ற அறிவிப்பு, மருத்துவம் பயிலத் துடிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன ஏழை எளிய மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கடும் எதிர்ப்பு, முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துதல் போன்றவற்றில் தி.மு.. அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் உரை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கொடுந்துயரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை வழங்குதல், மளிகைப் பொருட்கள் அளித்தல் போன்ற மக்கள் நலத் திட்டங்கள், மீனவர் நல ஆணையம், பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் விடுதிகள் அமைத்தல் போன்றவை பாராட்டத்தக்கவை ஆகும்.

ஈழத்தமிழர்களின் உரிமை வாழ்வை உறுதி செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ மக்களுக்கு இந்தியக் குடி உரிமை அளிக்கக் கோரி இருப்பதும், திமுக அரசின் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறையைக் காட்டுகின்றது.

தமிழக முதல்வர் திரு. மு..ஸ்டாலின் அவர்கள், டெல்லியில் பிரதமர் மோடி அவர்களை ஜூன்17 -ஆம் தேதி சந்தித்து முன் வைத்த கோரிக்கைகளை, நிறைவேற்றுவதற்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்.

 தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில், தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை ஏற்படுத்தி இருக்கின்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

 

Top