logo
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி  பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-ஆவது நாளாக  போராட்டம்

கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-ஆவது நாளாக போராட்டம்

10/Feb/2021 05:11:17

ஈரோடு, பிப்: கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி  ஈரோடு (பெருந்துறை) அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-ஆவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையில் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி,மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியில் 500- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான ரூ. 4  லட்சத்து 11 ஆயிரம் வசூலிக்க படுவதாகவும் அரசு கல்லூரியில் வசூலிக்கும் ரூ. 13 ஆயிரத்து 600 தொகையை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ,மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து  வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முதல் இரண்டு நாட்கள் கல்லூரி நுழைவாயில்  முன்பு மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து  ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்,  பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம்  ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளிடம் பேச்சு நடத்தி  அவர்களது கோரிக்கையை அரசின் கவனத்துக்கு  கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 இதையடுத்து மாணவ மாணவிகள் கல்லூரி ஆடிட்டோரியத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டம் இன்று 6-ஆவது நாளாக நீடித்து வருகிறது. புதன்கிழமை ஆடிட்டோரியத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Top