logo
புதுக்கோட்டை உழவர் சந்தையில் வெளியில் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்த கோரி விவசாயிகள் சாலை மறியல்

புதுக்கோட்டை உழவர் சந்தையில் வெளியில் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்த கோரி விவசாயிகள் சாலை மறியல்

03/Feb/2021 09:44:53

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காக தான உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. 

அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும்.  புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். 

 வெளிக்கடைகளால் விவசாயிகளின் விற்பனை பாதிப்பு: சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியே பல வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் தற்காலிக கடை போட்டு காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கபபடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.. மேலும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:  மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அரசு போக்குவரத்துக்கழகம்  பேருந்துகளை உழவர் சந்தைக்கு விடுவதை நிறுத்தி விட்டதால் தாங்கள் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து வரமுடியாமல் அவதிபபட்டு வருவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து  உழவர் சந்தை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில,

நாங்கள் 2000 -ஆம் ஆண்டிலிருந்து தோட்டக்கலையின் மூலமாக விவசாய உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எங்களின் விவசாயப் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், உழவர் சந்தை இரண்டு வாயில்களையும் வெளி ஆட்கள் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதன் மீது நிர்வாகத்திடம் புகார் அளித்தும்  நடவடிக்கைள் எடுக்கவில்லை.

  தற்பொழுது புதிதாக குழுக்கடைகள் என்ற பெயரில் விவசாய கடைகளை வெளியாட்கள் ஆக்கிரமித்துள்ளனர். எங்களுக்கு விவசாய பொருட்களை விற்பதற்கு போதுமான கடைகள் இல்லை. ஆனால் குழுக்கடைகளுக்கு விவசாய கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், உழவர் சந்தை வியாபாரிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென உழவர் சந்தையில் கடை நடத்திவரும் விவசாயிகள்  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இந்நிலையில், புதன்கிழமை (3.2.2021) காலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உழவர் சந்தை விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் மற்றும் காவல்துறையினர்  அங்கு சென்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் உழவர் சந்தைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும்  காவல்துறையினர் முன்னிலையில் நகராட்சி  ஊழியர்கள்  அப்புறப்படுத்தினர். இதையடுத்து விவசாயிகள்  தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

  


Top