02/Feb/2021 08:12:55
ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி அடுத்த அன்னே கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் மகேந்திரன்(32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அல்லிமுத்து(31). இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லி முத்துவின் சித்தி வசந்தி (50) அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகேந்திரனுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மகேந்திரனுக்கும் வசந்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரியவந்தது. அவர் மகேந்திரனை சித்தியுடனான தொடர்பை கை விடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் மகேந்திரன் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மகேந்திரன் வசந்தி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து மகேந்திரனுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கடுமையாகத் தாக்கினாராம். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாயக் கூட திண்ணையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அல்லிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடி வருகின்றனர்.