02/Feb/2021 08:05:22
ஈரோடு. பிப்: ஈரோட்டில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த அக்டோபர் மாதம் அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. தொடர் மழையும், வட மாநில வருகை குறைவும் அதற்கு காரணமாக கூறப்பட்டது. அதன் பின் படிப்படியாக விலை குறைந்து கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனையானது. இந்நிலையில் சில தினங்களாக மீண்டும் சின்ன வெங்காய விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு சந்தையில் கடந்த வாரத்தை விட இரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.80 வரை விலை அதிகரித்துள்ளது. இதற்கு வரத்து குறைவே காரணம் என்கின்றனர் வியாபாரிகள். பெரிய வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ.30 விலையிலிருந்து 50 வரை அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். நாள் தோறும் ஈரோடு சந்தைக்கு 150 டன் வெங்காயம் வரத்து இருந்து வந்த நிலையில் தற்போது சரி பாதியாக சரிந்துள்ளது. வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவது ஏழை எளிய மக்களையும் இல்லத்தரசிகளையும் கவலையடையச் செய்துள்ளது.