31/Jan/2021 05:02:11
ஈரோடு,ஜன: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த வனபகுதிகளில் ஒட்டியுள்ள காந்தி நகர், மட்டப்பாரை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று அப்பகுதிகளில் உள்ள ஆடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தனர். இதனையடுத்து ஆடுகளை வேட்டையாட மீண்டும் வந்த சிறுத்தை ஏற்கெனெவே வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.
இதனையறிந்த வனத்துறையினர் மருத்துவ சிகிச்சைக்காக சிறுத்தை கூண்டோடு எடுத்து சென்றனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகள் முடிவுற்ற நிலையில் சிறுத்தை வனப் பகுதிக்குள் விடுவதற்காக பாதுகாப்பாக கொண்டு வந்த வனத்துறையினர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியா தெங்குமரஹாடா வனப்பகுதிக்குள் சென்று கூண்டை திறந்து சிறுத்தையை விடுவித்தனர்.