28/Jan/2021 06:21:21
ஈரோடு- ஜன: ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னையன் ( 27). அதே பகுதியில் சிறிய உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக புதன்கிழமை இரவு சின்னையன் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வண்டியை சின்னையன் ஓட்ட பின் இருக்கையில் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.
பெருந்துறை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரமாக இருந்த கிணற்றில் முட்டி மோதியது. இதில் சின்னையன் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சந்தோஷ் கிணற்றுக்கு வெளியே விழுந்தார். கிணற்றுக்குள் விழுந்த சின்னையன் கிணற்றில் இருந்த திட்டின் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்த அருகிலிருந்தோர் வெள்ளோடு போலீஸாருக்கும் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் பணியாளர்கள் வந்தனர்.தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கி சின்னையன் உடலை மீட்டனர்.இறந்து போன சின்னையனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.