26/Jan/2021 07:31:27
ஈரோடு, ஜன: தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25-ஆம் தேதி நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் வாக்காளர்களக பதிவு செய்து கொள்ளாத வர்கள், வாக்களிப்பதன் முக்கியம், அதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஈரோடு , திண்டலில் நடைபெற்றது. விழிப்புணர்வு மாரத்தானைத் தொடங்கி வைக்க வந்த ஆட்சியர் சி. கதிரவன் மாரத்தானில் கலந்து கொள்ள வந்திருந்த கல்லூரி மாணவ,மாணவிகளிடம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டது குறித்து கேட்டறிந்தார். அதற்கு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டதாக மாணவர்கள் கூறியதையடுத்து அனைவரையும் ஆட்சியர் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் சி. கதிவரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
மாரத்தானின் போது வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்கத் தயாராக இருக்கிறேன், அனைவரும் வாக்களித்திட வேண்டும், தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட வேண்டுமென்பன போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. திண்டலில் தொடங்கிய மாரத்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சியர் கதிரவன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதி எடுத்துக்கொண்டனர்.