logo
 ஈரோட்டில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல்  சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

ஈரோட்டில் இருந்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

10/Jan/2021 06:40:25

ஈரோடு, ஜன: ஈரோடு-சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் இருந்து நேரடியாக சென்னைக்கு இயக்கப்படும்  ரெயில் இந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான். கிட்டத்தட்ட ஈரோட்டின் அடையாளமாக இருந்த இந்த  ஏற்காடு  எக்ஸ்பிரஸ் ரெயிலில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். ரெயில் என்ஜின் அருகே முதல் இரண்டு பெட்டிகளும், பின் பகுதியில் ஒரு பெட்டியும் பொது பெட்டிகளாக இருந்தது. மீதி  பெட்டிகளிலும் முன்பதிவு செய்தே  பயணிகள் பணித்தனர். குறிப்பாக வியாபாரிகள், விசைத்தறியாளர்கள், சென்னையில் தங்கி பொறியியல், சட்டம், மருத்துவம் படிக்கும்  மாணவர்கள் என ஏராளமானோர் சென்று வந்தனர். 

சேலம் கோட்ட ரெயில்வேயில் முக்கிய வருவாய் ஈட்டும் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இது இருந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்  ரெயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் படிப்படியாக பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு ஏற்கெனவே இயங்கி  வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்படாமல் உள்ளது. இதைப்போல் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து ஏற்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி, வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று  (ஜனவரி 10)முதல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்  சிறப்பு ரெயில் என்ற பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் மக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வந்தனர். மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட்  அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சாதாரண டிக்கெட் ரூ.270, மூன்றாம் வகுப்பு ஏ.சி ரூ.700, இரண்டாம் வகுப்பு ஏ.சி.ரூ.1000, முதல் வகுப்பு ஏசி ரூ.1600-க்கு  முன்பதிவு செய்யப்பட்டது. ரெயில் பயணிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பயன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Top