logo
ஈரோட்டில் தனிப்பிரிவு தலைமை காவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

ஈரோட்டில் தனிப்பிரிவு தலைமை காவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

20/Jan/2021 11:51:41

ஈரோடு, ஜன:  ஈரோடு தனிப்பிரிவு தலைமைக் காவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர்  சோதனை  நடத்தினர்.

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார்(48). இவர், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு  தலைமை காவலராகப்பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர் புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த ஒரு மாதமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் தனிப்பிரிவு தலைமை காவலர் வேல்குமார் வீட்டில் புதன்கிழமை  காலை சுமார் 8 மணிக்கு அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினர். இதில், அவர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், அசையா சொத்துக்களின் ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், காசோலை  போன்றவற்றை கைப்பற்றினர். 

மேலும், வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு குறித்து வேல்குமாரிடமும் அவரது மனைவியிடமும் அதிகாரிகள் தீவிர  விசாரணை நடத்தினர். வேல்குமார் பணம், நகை ஏதேனும் பதுக்கி வைத்துள்ளரா? என வீட்டின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது மட்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வேல்குமாருக்கு சொந்தமான ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் உள்ள குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top