23/Sep/2020 11:45:24
புதுதில்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 83,347 புதிய பாதிப்புகளுடன் 56 லட்சத்தை கடந்துவிட்டது, அதே நேரத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தில்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:பெரும்பாலான கொரோனா தொற்றுகள் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால் பயனுள்ள தகவல்கள் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், வதந்திகள் உயரக்கூடும். சோதனை மோசமானது என மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதிலும் சிலர் தவறு செய்கிறார்கள்.பயனுள்ள சோதனை, தடமறிதல், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தெளிவான தகவல்கள் ஆகியவற்றில் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.