12/Jan/2021 01:55:11
ஆப் ஸ்டோரில் இலவச ஆப்ஸ் பிரிவில் வாட்ஸ்ஆப்பை பின்னுக்குத்தள்ளி சிக்னல் ஆப் முதலிடம் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அண்மையில் அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது.
புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறி வருகிறது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு மாற்றாக புதிய செயலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே 4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், வாட்ஸ்ஆப்புக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு கோரினார். இதையடுத்து சிக்னல் செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியா மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, பின்லாந்து, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் சிக்னல் செயலி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு ள்ளது. பல நாடுகளில் ஆப் ஸ்டோரின் இலவச பயன்பாடுகள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சிக்னல் நிறுவனம் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, அதில் வாட்ஸ்ஆப் இரண்டாமிடத்திலும், சிக்னல் ஆப் முதலிடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிக்னல் செயலி நிறுவனத்தின் பங்கு கடந்த வியாழக்கிழமை 527 சதவீதமும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 91 சதவீதமும் உயர்ந்துள்ளது.