01/Jul/2021 11:18:20
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா
ராமு வெளியிட்ட தகவல்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில்
நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை
2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு
சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 5.7.2021 முதல் 3.8.2021 வரைகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசாணை நிலை எண்.60 பள்ளிக் கல்வித்துறை நாள்: 1.4.2013-இல் படிவம் I I - இல் கீழ்க் குறிப்பிட்டுள்ளபடி பிறப்புச் சான்று, மருத்துவமனை Auxillary and Midwife Register, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர், பாதுகாவலரால் வயது நிருபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி.
குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி சேர்க்கைக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான, ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.
நலிவடைந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானச் சான்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும்.
மேலும் இருப்பிடத்தினை நிரூபிக்கும் சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை பெற்று இணைய வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.