logo
இறந்தவரின் உடலை பட்டா இடத்தின் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இறந்தவரின் உடலை பட்டா இடத்தின் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

25/Dec/2020 01:11:22

புதுக்கோட்டை-டிச: புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி அருகே இறந்தவரின் உடலை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தின் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

கறம்பக்குடி அருகே மயிலாடி தெரு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தின் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இக்கிராமத்தை சேர்ந்த அடைக்கன் ( 85) என்ற முதியவர் இறந்தார். அவரது உடலை பட்டா இடத்தின் வழியாக எடுத்து செல்ல உறவினர்கள் முயற்சி செய்தனர். இதை அறிந்த பட்டா நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மோதல் ஏற்படும் நிலை உருவானது.

பேச்சுவார்த்தை:இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று, இருதரப்பை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இறந்தவரின் உடலை அரசுக்கு சொந்தமான வாரி புறம்போக்கு நிலத்தின் வழியாக கொண்டு செல்வது, அந்த வழிதடத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மயான சாலை அமைத்து கொடுப்பது என முடிவு செய்யபட்டது. இதையடுத்து இறந்த முதியவரின் உடலை வாரி புறம்போக்கு இடத்தின் வழியாக உறவினர்கள் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Top