logo
வழக்கமான பெயர்களிலேயே ரயில்களை இயக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

வழக்கமான பெயர்களிலேயே ரயில்களை இயக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

20/Dec/2020 11:31:21

சென்னை: வழக்கமான பெயர்களிலேயே ரயில்களை இயக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை: கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற தொடரிகள், முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய தொடரி நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுமையும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் தொடரிகள் இரு வழிகளிலும் ஓடிக் கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 இலட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக் கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.

ஆனால், இப்போது பாதித் தொடரிகள்தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை விரைவுத் தொடரி எண் 06064, மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் விரைவுத் தொடரி எண் 06731, 06730, நாகர்கோவில் -கோவை விரைவுத் தொடரி எண் 02667, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவுத் தொடரி எண் 02633 ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

மேலும், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி- தில்லி நிஜாமுதீன் விரைவுத் தொடரி எண் 06012, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை வண்டி எண் 06064 ஆகிய தொடரிகளும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை.

இதனால், ஏழை,எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, மேற்கண்ட தொடரிகள் அனைத்தும், முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் தற்போது விரைவு ரயில்களை மட்டுமே இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பாசஞ்சர் வண்டிகளை ஓட்டுவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், தமிழகம் முழுமையும் லட்சக்கணக்கான மக்கள், அன்றாடம் பாசஞ்சர் ரயில்களைளைத்தான், தங்களுடைய தொழில், வேலைவாய்ப்புக்கு நம்பி இருக்கின்றனர். எனவே, பாசஞ்சர் ரயில்களையும் இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த அத்தனைத் தொடரிகளின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள்.

இப்படிப் பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றினார்கள்? இது தேவை அற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளோடு தெற்கு ரயில்வே விளையாடக் கூடாது; வழக்கமான பெயர்களிலேயே தொடரிகளை இயக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 


Top