03/Dec/2020 02:35:38
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் அப்பகுதி மக்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .மேலும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செந்தில்குமார் என்ற தொழிலாளியை மற்றொரு தொழிலாளி சந்திரன் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றாராம். இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடையால் இந்தப் பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழர் கழகம் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் பிரபுதேவா தலைமையில் நிர்வாகிகள் டாஸ்மாக் கடை அருகே உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க 50- க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் டாஸ்மாக் கடை திறக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.