logo
வாக்கு எண்ணும் மேசைகளைக் குறைக்கும் விவகாரம்: புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர்கள் கோரிக்கை

வாக்கு எண்ணும் மேசைகளைக் குறைக்கும் விவகாரம்: புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர்கள் கோரிக்கை

22/Apr/2021 11:33:27

புதுக்கோட்டை, ஏப்: சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்குகளை  எண்ணும் மேசைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாதென  திமுக வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக,  புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான  பி.உமா மகேஸ்வரியிடம்  அளித்துள்ள மனு விவரம்:

  வாக்கு எண்ணும் மையங்களில் இணைய வசதி செய்யும் பணி தொடங்க உள்ளதாக தெரியவருகிறது.இணைய தளப் பயன்பாட்டுக்காத பிஎஸ்என்எல் ஊழியர்கள்  உள்ளே வரும்போது பல்வேறு சந்தேகங்களும் கூடவே வருகிறது. அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இணையதள வசதி செய்ய வேண்டும்.

மேலும் இணைய தள இணைப்பு கொடுப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர் களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு  கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கையுறை, கிருமி நாசினி  போன்றவற்றை வழங்க வேண்டும்.

மேலும் ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் என்பதால் காலதாமதம் ஏற்படவும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் ஒரு சுற்றுக்கு 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்  அந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதாகவும் வேட்பாளர்களிடம் தெரிவித்தார். 

இதில்,  திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், திமுக வேட்பாளர் கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, திருமயம் எஸ். ரகுபதி, ஆலங்குடி சிவ.வீ. மெய்ய நாதன்,  கந்தர்வகோட்டை சிபிஎம் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு மனுவை அளித்தனர்.

இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்தில் மேசைகள் எண்ணிக்கை குறைப்பு இல்லை; அதற்கு பதிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் டைபிடிக்கப்படும் எனவும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், முகவர்கள் என அனைவருக்கும் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டுமென  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.


Top