24/Nov/2020 06:32:23
ஈரோடு: ஈரோடு, கரூர் ,திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 95.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2170 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது