logo

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 பேர் பலி- போலீசார் விசாரணை

18/Nov/2020 10:46:35

ஈரோடு: ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே சம்பவத்தன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக  சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த  முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்  என்ற விவரம் தெரியவில்லை. அவர் வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், ஈரோடு பழனியப்பா வீதியில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடப்பதாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த நபரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்,  போன்ற விவரம் தெரியவில்லை.

இதைப்போல், ஈரோடு அரசு மருத்துவமனையில் 75 மதிக்கத்தக்க முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த முதியவர்  சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Top