logo
காலமானார்.. ஓய்வறியாத சமூக சேவைப் போராளி புதுக்கோட்டை அருண்மொழி...

காலமானார்.. ஓய்வறியாத சமூக சேவைப் போராளி புதுக்கோட்டை அருண்மொழி...

12/Nov/2020 08:45:02

புதுக்கோட்டை: ஒரு நாளும் ஓய்வறியாத மிகச்சிறந்த சமூக சேவைப் போராளி புதுக்கோட்டை அருண்மொழி மாரடைப்பால் இறந்துபோய்விட்டார்.ஐங்கரன் காபி கடைகளின் உரிமையாளர். 

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நீட் தேர்வு எதிர்ப்பு, மருத்துவ மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள், எழுவர் விடுதலைக்கான போராட்டங்கள், இளம்பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அத்தனையிலும் தோழமை இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில் தவறாமல் பங்கேற்கும் அருண்மொழி, ஆம் ஆத்மி கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலர். 

நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த மாணவ, மாணவிகளை தேர்வு மையங்கள் போடப்பட்ட கேரளத்துக்கும் திருச்சிக்கும் தனது சொந்த வேனிலேயே அழைத்துச் சென்று பத்திரமாக ஓட்டிச் சென்ற டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் - உரிமையாளர் சங்க நிர்வாகி.

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கும், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், தீ விபத்தால் வீடுகளை இழந்தோருக்கும் என எப்போதும் அசராமல் உதவிகளை சேகரித்து நேரில் சென்று வழங்கிய ஓயாத அலைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

பொது முடக்கக் காலத்தில் மருத்துவமனைக்கு கரோனாவுடன் வந்தோருக்கும் பிற நோய்களுடன் வந்தோருக்கும் உணவு வழங்கினார். திருநங்கைகளுக்கு உதவிகள் வழங்கினார். குரங்குகளுக்கும் பழங்களை வழங்கினார்.

அவரது திடீர் மறைவு பெரும் துயரைத் தருகிறது.ஓரிரு மணித்துளிகளில் உயிர் பிரிந்தேவிட்டது. கொடுமை என்று புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Top