logo
விலை உயர்வால் சின்ன வெங்காயம்  பயிரிடுவதில் கோபி பகுதி விவசாயிகள் ஆர்வம்

விலை உயர்வால் சின்ன வெங்காயம் பயிரிடுவதில் கோபி பகுதி விவசாயிகள் ஆர்வம்

03/Nov/2020 06:19:53

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் வினோபாநகர் பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விலை உயர்வு அடைந்து வரும் சின்ன வெங்காயத்தை பயிர் செய்வதில் விவசாயிகள் முனைப்புக் காட்டிவருகின்றனர்.

தமிழகத்தில் அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் விலை கடந்த வாரமாக  விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் சின்னவெங்காயம் கிலோ ஒன்று ரூ.60-க்கு விற்பனை ஆன நிலையில் இந்த வாரம் கிலோ ஒன்று ரூ.100 முதல் 120 வரை விற்பனை ஆகிவருகிறது. இனி வரும் நாட்களில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்வுகள் காலம் என்பதால் சின்னவெங்காயத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கொங்கர்காளையம், வினோபாநகர், வாணிப்புதூர், மோதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ வெங்காயம் தேவைப்படும் நிலையில் தற்போது விதை வெங்காயம் கிலோ ஒன்று ரூ.80 முதல் 100 வரை கொள்முதல் செய்து தீவிர நடவுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஏக்கர் ஒன்றுக்கு தற்போது ரூ.50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை முதலீடு செலவு ஆவதாகவும் வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை இதேபோல் இருந்தால் தற்போது நடவு செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவு லாபம் ஈட்டவாய்ப்புள்ளதாகவும் விலை குறைந்தால் விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது இப்பகுதியில் மட்டும் 100 ஏக்கருக்கும் மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்யும் விவசாயிகளும் அதனை வாங்கிப் பயன் படுத்தும் பொதுமக்களுக்கும் கண்ணீர் சிந்தாமல் இருந்தால் சரி என அனைத்துதரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Top