logo
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துடன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துடன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு.

20/Feb/2021 07:41:52

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்துடன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீரென  சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நாளை (பிப்-21)காலை  சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல்  கல்லூரி உள் அரங்கத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

 கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலையில் நிறைவடைந்ததும் மாலையில் பத்திரிகையாளர்களை கமல்ஹாசன் சந்திக்கிறார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, போன்ற முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி கட்சி தொடங்காத நிலையில், அவரை சந்தித்து ஆதரவு கேட்பேன் என கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Top