30/Oct/2020 11:53:05
புதுக்கோட்டை: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு அளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் மா.குமரேசன் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசுப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த குழப்பமான சூழ்நிலையை போக்கிட கல்வித்துறை சரியான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனடியாக அமைதி அளித்திட வேண்டும்.
இலுப்பூர் சார்நிலை கருவூலத்தில் நிலுவைத் தொகை கேட்புப் பட்டியல் விதிகளுக்கு முரணாகவும் உள்நோக்கத்துடனும் தணிக்கை தடைபோடுவதை கைவிட்டு (இலுப்பூர் பள்ளி எஸ்தர் ராணி) உடனடியாக ஏற்பு செய்து பணப்பலனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் குரு.மாரிமுத்து, பொருளாளர் க.ஜெயராம், மாநில தணிக்கை யாளர் ச.ரெங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.