29/Oct/2020 12:15:51
சென்னை: கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.இன்று(அக்.28) ஆலோசனை நடத்திய பின்னர் ஆட்சியர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒப்பிட்ட பிற மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பண்டிகையொட்டி மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்திட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக்காலத்தில் அவசர கால முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
டெங்கு உள்ளிட்ட பருவகால நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிட் சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தேவைகளை பூர்த்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். திரையரங்குகளை திறப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மலைப்பாங்கான மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்களை வைத்திருக்க வேண்டும்.கோயம்பேடு சந்தையில் பழம், சிறு வியாபாரிகளை அனுமதிப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.