logo
இன்றைய சிந்தனை (28.10.2020) இக்கரைக்கு அக்கரை பச்சை...

இன்றைய சிந்தனை (28.10.2020) இக்கரைக்கு அக்கரை பச்சை...

28/Oct/2020 09:52:37

பசுமையும், பனி மேகங்களும், கானலும், நாம் இருக்கும் இடத்தில் தெரியாது, இங்கிருந்து கண்டால் அங்கிருப்பது போலவும் அங்கிருந்து கண்டால் இங்கிருப்பது போலவும் தோன்றும்.இது இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்கிற தமிழ்ப் பழமொழிக்கு சான்று.

ஆற்றின் இக்கரையில் இருந்துகொண்டு ஒருவர் ஆற்றின் எதிர்புறக் கரையில் உள்ள தோட்டத்தைக் காண்கிறார். அட, நமது தோட்டத்தைக் காட்டிலும் அந்தத் தோட்டம் மிகச் செழிப்பாக இருக்கிறதே, என்று எண்ணி அந்த தோட்டத்தை காண்பதற்கு மறுகரை சென்றார்.அப்படிக் காணும்போது தூரத்தில் செழிப்பாக தெரிந்த அந்தத் தோட்டத்தின் அருகில் சென்று காணும்போது, அந்த தோட்டத்தில் பயிர்களில் பரவியுள்ள நோயும், செடிகளின் வாட்டத்தையும் கண்டார்.

தூரத்தில் பச்சைப் பசேல் என்று தெரிந்த தோட்டம் இப்படி இருக்கிறதே, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார், இனி எதையும் கண்டவுடன் முடிவெடுக்கக் கூடாது என்று உணர்ந்தார்.

ஆம் இது நம் வாழ்க்கை நெறிகளுக்கும் பொருந்தும். தூரத்தில் எதையும் மேலோட்டமாக பார்த்து விட்டு கருத்து கொள்ளக் கூடாது.சிலர் வெளிப் பார்வைக்கு கார், பங்களா,என்று தடபுடலாக என்று வாழ்வார்கள். ஆனால், அவர்களின் அருகில் சென்று பழகிப் பார்த்தால்தான் அவருக்கு உள்ள கடன்கள் பற்றியும், ஓட்டை உடைசல்கள் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாகவே ஒருவரின் மேலோட்டமான  விளம்பரங்களையும்,,ஆடம்பரங்களையும், படோபங்களையும் மட்டும் பார்த்து எடை போட்டு பழகி விட்டோம். ஆம்.. நண்பர்களே.. ஒருவரைப்பற்றி முடிவு எடுக்கும்போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று நிறுத்தி, நிதானமாக நாம் எடுத்த முடிவு சரிதான என்று ஒரு முறைக்கு பல முறை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதே சாலச் சிறந்தது.

Top