logo
கொலை மிரட்டல் விடுத்ததாக வி.சி.,கட்சியினர் மீது பாஜக நிர்வாகி ஈரோடு எஸ்பி.,யிடம் புகார்

கொலை மிரட்டல் விடுத்ததாக வி.சி.,கட்சியினர் மீது பாஜக நிர்வாகி ஈரோடு எஸ்பி.,யிடம் புகார்

27/Oct/2020 11:11:41

ஈரோடு: விடுதலை சிறுத்தை கட்சியினர் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பொருளாளர் ஈரோடு எஸ்பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ஈரோடு பெதுந்துறை ரோடு பகுதியை சேர்ந்த தெற்கு மாவட்ட பாஜக பொருளாளர் தீபக்ராஜா நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி., தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார். 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை இழிவாக பேசியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் அவர் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்து, அவரை கைது செய்யாததை கண்டித்து கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம்.

 பின்னர், கந்தசாமியூர் அருகே சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு கட்சி நிர்வாகிகள் சண்முகம், ரகுபதி ஆகியோருடன் கொண்டிருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினை சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் எனது வாகனத்தையும், எங்களையும் கற்களால்  எறிந்து தாக்கினர்.

 இதில், சண்முகத்திற்கும், ரகுபதிக்கும் ரத்த காயங்களும், காரும் சேதமானது. பின்னர், அந்த நபர்கள் என்னையும், ரகுபதியையும் அடையாளம் காட்டி இன்னும் ஒரு வாரத்தில் தீர்த்துக்கட்டி விட வேண்டும் என மிரட்டல் விடுத்து விட்டுச் சென்று விட்டனர். 

திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினர் அரசியல் செல்வாக்கு, பண பலம், ஆள் பலம் உள்ளதால் எங்களுக்கு அச்சமாக  உள்ளது. எனவே, அந்த நபர்களால் எங்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களை மிரட்டிய நபர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும் எனறு அந்த மனுவில் கூறியுள்ளார். 


Top