26/Oct/2020 09:01:29
ஈரோடு:பண்ணாரி அருகே யானையின் தாக்குதலில் இருந்து இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அடர்ந்த வனத்தின் மத்தியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் திம்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
தமிழகம் கர்நாடக இடையே பேருந்து போக்குவரத்து சேவை இல்லாத நிலையில் இரு மாநில எல்லையில் வசிக்கும் கிராமமக்கள் இரு சக்கர வாகனத்தில் திம்பம் வழியாக செல்கின்றனர்.பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் கரும்பு தின்று பழிகய ஒற்றையானை அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் இயல்பாக பயணித்தனர்.
இந்நிலையில், இன்று பண்ணாரி சோதனைசாவடி அருகே சாலையோரம் ஒற்றை யானை தீவனம் தின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அவ்வழியாக பயணித்தனர். சாலையோரம் தீவனம் சாப்பிட்டு க்கொண்டிருந்த யானை அருகே சென்ற போது யானை திடீரென இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க ஓடிவந்தது. அவர்கள் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி தப்பித்தனர்.
இந்த நிகழ்வை இரு சக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவர் பயமின்றி யானை தாக்க வருவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து சாலையோரம் முகாமிட்ட ஒற்றையானை வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தினர். இருப்பினும் சாலையோரம் யானைகள் தென்பட்டால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.