10/Oct/2020 06:24:02
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபட்டு, பின்னர் வீட்டிற்கு சென்று படையலிட்டு குடும்பத்துடன் பெருமாளை வழிபடுவது வழக்கம். ந்நிலையில், இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. இதில், ஈரோடு பவானி ரோட்டில் உள்ள பெருமாள் மலையில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டு சென்றனர்.
இதேபோல், ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில், கூடுதுறை ஆதிகேசவபெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்கள் கடந்த 3 சனிக்கிழமையை காட்டிலும் இன்று பக்தர்கள் அதிகளவில் கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு சென்றனர்.