09/Oct/2020 12:50:41
திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், குரும்பம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தாமதமாகும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம், தொழில் சங்கங்கள், மற்றும் சமுதாய சங்கங்கள் சேர்ந்து தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான முடிதிருத்தும் கடைகளை அடைத்து இன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.