logo
கல்லூரிகளில் கலாசார நிகழ்ச்சிகளுக்குத் தடை: கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

கல்லூரிகளில் கலாசார நிகழ்ச்சிகளுக்குத் தடை: கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

02/Sep/2021 11:48:03

தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என கல்லூரி முதல்வர்களுக்கு, கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, இன்று முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, இன்று முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும்  மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

முதலாமாண்டு மாணவர்களுக்குச் சில காலம் ஆன்லைனிலே வகுப்புகள் தொடரும். பி.இ, பி.டெக், பி.எஸ்ஸி (வேளாண்மை) உள்ளிட்ட நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், அனைத்து கல்லூரிகளிலும் கலாசார, பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Top