logo
 ஈரோட்டுக்கு வரும் பஸ்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணிப்பது அரசின் அறிவுறுத்தல்களை கேள்விக்குறியாக்கியுள்ளது

ஈரோட்டுக்கு வரும் பஸ்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணிப்பது அரசின் அறிவுறுத்தல்களை கேள்விக்குறியாக்கியுள்ளது

27/Aug/2021 08:18:34

ஈரோடு, ஆக:  ஈரோட்டுக்கு வரும் பஸ்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் பயணிப்பது அரசின் அறிவுறுத்தல்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆம் அலை அதிகரித்தபோது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடந்த 9 -ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை மாவட்டத்தில் புதிய நேர கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் கடைகள்  தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதைப்போல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொற்று பாதிப்பு வரக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி  ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மருந்தகம், மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், கர்நாடக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வந்தனர். வெளிமாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தினசரி கொரோனா பரிசோதனை மீண்டும்  10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும்  பணியும் தீவிரமாக  நடந்து வந்தது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

குறிப்பாக, ஈரோடு மாநகர் பகுதியில் தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 146 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 594 ஆக உயர்ந்தது. இதுவரை 646 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 1557 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வெளியூர்களில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் பஸ்களில் வரும் பெரும்பாலான பயணிகள் முக கவசம் அணிவது இல்லை. ஒரு சிலர் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வாய் மூக்கு தெரியும்படி கழுத்திற்கு கீழ் அணிந்து வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேலம், கோயம்புத்தூரில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்களில் பயணிகள் முக கவசம் முறையாக அணிவதில்லை. 

ஈரோடு பஸ் நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்ற காரணத்தால் மட்டும் ஒரு சிலர் முக கவசம் அணிவது போல் பாசாங்கு செய்கின்றனர். ஈரோட்டை கடந்தவுடன் முக கவசத்தை எடுத்து விடுகின்றனர்.

இதை  சில பஸ் டிரைவரும், கண்டக்டரும் கண்டுகொள்வதில்லை. கொரோனாவை வெல்லும் முக்கிய ஆயுதமாக முக கவசம் இருந்து வருகிறது. பொதுமக்கள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Top