logo
தென்மாவட்ட பஸ்களை  சோலார் பகுதியில் அமைக்கப்படும்  தற்காலிக பஸ் நிலையம் மூலம்  இயக்க நடவடிக்கை

தென்மாவட்ட பஸ்களை சோலார் பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையம் மூலம் இயக்க நடவடிக்கை

27/Aug/2021 12:54:02

ஈரோடு, ஆக: ஈரோடு பஸ் நிலையம்  ஈரோடு மாநகர மையப்பகுதியில் அமைந்துள்ளது.  இட நெருக்கடியான இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் பஸ்கள் வந்து செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் பஸ் நிற்கும் ரேக்குகள், மேற்கூரை, தூண்கள் நடைபாதை மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளது. இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. 

 இங்கு புதிய கட்டிடங்கள் கட்டவும் நவீன கழிப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாட்டு பணிகளை பல்வேறு கட்டங்களாக நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதற்காக முதற்கட்டமாக கரூர் திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ் நிற்கும் பகுதியில் பணிகளை செய்யவும் தென்மாவட்ட பஸ்களை மட்டும் வேறு இடத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சோலாரில் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அங்கு தென் மாவட்ட பஸ்கள்  மட்டும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகர் பஸ் நிலையத்தில் மேம்பாடு பணிகள் நடைபெற இருப்பதால் தென்மாவட்ட பேருந்துகள் மட்டும் இயக்கும் வகையில் சோலாரில்  தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உணவு வசதி போன்றவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பணிகள் தொடங்கப்படும். இதன் பின்னர் ஈரோடு மாநகர பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போது முதற்கட்டமாக தென்மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் ரேக்குகளில் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடங்க உள்ளது. மற்ற ரேக்குகளில் உள்ள பஸ்கள் வழக்கம்போல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்றார் அவர்.


Top