27/Aug/2021 12:41:09
ஈரோடு, ஆக: ஈரோடு சூரம்பட்டி அருகே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்புத்தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை அடுத்து லட்சுமி கார்டன் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பகுதியில் புதிதாக மேலும் அந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சார்பாக ஒரு டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பகுதியில் மீண்டும் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைந்தால் இதன் ரேடியேசன் மூலமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுவார்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் ஏற்கெனவே மாநகராட்சியும் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் இன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் ஊழியர்கள் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.