logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்: ஆட்சியர் தகவல்

19/Aug/2021 12:21:10

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட  தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதப்பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்.  2020-2021ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வாயிலாக தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்டகட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் வரை நிதியுதவி பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு ரூ.50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில்,புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முந்திரி விளை பொருள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆகவே, மாவட்ட அளவில் ஏற்கெனவே இயங்கி வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட முந்திரி விளைபொருளை பதப்படுத்தும் தொழிலில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ள மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையலாம்.

 மேலும், விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தின் 04322-260688 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்

Top