logo
சத்தியமங்கலம் கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி  வழிபாடு

சத்தியமங்கலம் கம்பத்ராயன்கிரி நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி வழிபாடு

04/Oct/2020 07:33:17

சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் அடர்ந்த வனத்தில்  பவளக்குட்டை கம்பத்ராயன் மலை உச்சியில் நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பகல் என இரு நாட்கள் விழா  கொண்டாடப்படுவது வழக்கம். 

மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு செல்வதற்கு சாலை வசதி  இல்லதால் கரடு, முரடான செங்குத்தான யானை வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும். சத்தியமங்கலத்திலிருந்து  12 கிமீ தூரத்தில் உள்ள இக்கோயிலை சென்றடைய வேண்டுமெனில் முதல் அடிவாரம், கம்பத்ராயன்அடிவாரம், சின்னகணுக்கு மடுவு, பெரியகணுக்குமடுவு, மாமடுவு, மட்டுக்காடு போன்ற  6 செங்குத்தான மலைக்குன்றுகளை கடந்து சென்றால் தான் 7-வது மலைக்குன்றான கம்பத்ராயன்கிரியிலுள்ள கோயிலை சென்றடைய முடியும்.

 பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊன்று கோல் உதவியுடன் 7 மலைக்குன்றுகளை கடந்து கோயில் விழாவில் கலந்து கொண்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பரம்பரை கோவில் அர்ச்சகர் நரசிம்ம பெருமாளுக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவை தொடக்கி வைத்தார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வில், அம்பு, ராமர்பாதம் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து, திருக்கொடி விழாவிற்காக பெரிய வெண்கலப்பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றியும், அதில் கற்பூரத்தை போட்டும் எட்டு முழ வேஷ்டியை திரியாக மாற்றி திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த கொண்டப்பநாயக்கன்பாளையம் கிராமமக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் கோவிந்தா என்ற முழக்கத்துடன் இரவு 8 மணிக்கு 20 அடி கருடகம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றினர். 

இந்த தீபஒளி 35 கிமீ தூரத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி மொண்டி பெருமாள் கோயில் வரை தெரிந்தது. மலை மீது தெரிந்த தீபஒளியை பக்தர்கள் பார்த்து விட்டு தங்களது நோன்பு விரதத்தை முடித்துக் கொண்டனர். முன்னதாக நேற்று அதிகாலை நரசிம்ம பெருமாளுக்கு அலங்கார பூஜையும், ராமர்பாதத்திற்கு தீபாராதனையும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தப்பாறையில் தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, தீர்த்தப்பாறைக்கு அடியில் வைக்கப்பட்ட குவளையில் நீர்நிரம்பும் அளவை பொருத்து மழை பெய்யும், மக்கள் வளம் பெருவார்கள் என்பது ஐதீகம். கொரோனா காலகட்டத்திலும் ஏராளமான பக்தர்கள்  வந்திருந்து தரிசனம் செய்தனர். 


Top