07/Dec/2020 05:05:17
ஈரோடு, டிச: தமிழகத்தில் கொரனோ அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வாக தற்போது கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் முதுகலை அனைத்து பிரிவு மாணவர்கள் மற்றும் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஈரோட்டில் எட்டு மாதங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு வந்த மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தங்களது நண்பர்களை சந்தித்தனர்.
முக கவசம் கட்டாயம், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் கைகளுக்கு சானிடைசர் உபயோகிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. கல்லூரியின் முகப்பிலேயே மாணவர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன. வகுப்பில் 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளான இன்று மாணவர்களின் வருகை சற்று குறைவாகவே இருந்தது.
கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் சில கல்லூரிகளில் கொரனோ பரிசோதனை செய்வதற்கான முகாம்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.