03/Aug/2021 01:10:03
ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் 207 இடங்களில் நடந்த முகாம்களில் 11, 200 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் ஜனவரி 16 -ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கோவிஷில்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதலில் அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
பின்னர், மாவட்டத்தில் கொரோனா 2-ஆம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உயிர் இழப்பும் அதிகரித்தது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்.தடுப்பூசி போடப்படும் மையங்களின் முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட்டு சென்றனர்.
கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கடந்த மாதம் 24 -ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் அந்தந்த ஓட்டுச்சாவடியில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது. கடந்த வாரம் முதல் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று போக்கும் கொடுத்து அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, திங்கள்கிழமை ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 207 இடங்களில் 11,200 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.