02/Aug/2021 06:03:52
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் விநாயகருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விநாயகர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . ஏற்பாடுகளை சிவ ஸ்ரீபாலா ஸ்ரீ குருக்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஆடி கிருத்திகை சிறப்புகள்:
முருகனுக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் ஆடி கிருத்திகை கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது.
ஆடி கிருத்திகை தினத்தில் தான் சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். இதன், காரணமாக தான் முருகனுக்கு 6 முக்கியப் பங்கு வகிக்கின்றது.
சரவணபவ என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளை, சூரனை அழித்து, தேவர்களைக் காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
விஷேசம்: ஆடி கிருத்திகை தினத்தில், உலக தமிழ் மக்கள், தமிழ் கடவுள் முருகனுக்கு பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் முக்கிய நாளாகக் கொண்டாடுகின்றார்கள். மாதந்தோறும் வரும் கிருத்திகை தினத்தில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துபவர்களும் உள்ளனர். அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த கிருத்திகை தினத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, என மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பலன்கள்: பொதுவாக செவ்வாயின் அம்சமாக முருகப் பெருமான் பார்க்கப்படுகிறார். அதனால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை மண், மனை, சொத்து வழக்குகளில் பிரச்னைகள், செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட்வர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை வணங்கி அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு, சகல ஐஸ்வரியத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.