28/Jul/2021 10:21:36
ஈரோடு, ஜூலை:ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக ஜனவரி 16 -ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார், வருவாய்த் துறையினர் மற்றும் பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முதலில் அச்சம் காரணமாக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. பின்னர் மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகம் மறுத்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உயிர் இழப்பும் அதிகரித்தது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார். நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போட்டு சென்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 24 -ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் அந்தந்த ஓட்டுச்சாவடியில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை, 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செய்து கொண்டனர். இந்நிலையில், மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் படி கொரோனா தடுப்பூசி போடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் படி வீடுகளுக்குச் சென்று முன்னுரிமை சீட்டு வழங்கி தடுப்பூசி போட அழைக்கப்பட்டனர்.
அந்த சீட்டில் தேதி, வார்டு எண், பெயர், விலாசம், மொபைல் எண், அலுவலர் கையெழுத்து, தடுப்பூசி போடும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மட்டும் 9 ஆயிரத்து 50 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை வாக்காளர் பட்டியல் படி, மாவட்டம் முழுவதும் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 182 இடங்களில் 17,000 பேருக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்படுகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோவிஷில்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக ஏராளமானோர் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.