logo
வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்திற்கு  முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கல்

வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்திற்கு முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கல்

28/Jul/2021 06:22:03

புதுக்கோட்டை, ஜூலை: வாசகர் வட்டம் சார்பில்  புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்திற்கு  முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

 கடந்த பல ஆண்டுகளாக  செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில்  ஒவ்வோர் ஆண்டும், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டிகள்  நடத்தி, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி   வாசகர்களின் திறமையை  ஊக்குவிக்கும் உன்னத பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில்,  கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த  புதுக்கோட்டை  மாவட்ட மைய நூலகம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் (இணையதளங்கள், தொலைக்காட்சி) முடங்கிக்கிடந்த வாசகர்கள் தற்போது சுதந்திரம் கிடைத்து  நூலகத்துக்கு வந்து தங்களது அறிவை கூர்மையாக்க  திரண்டு வருகின்றனர்.

இவர்களது பாதுகாப்புக்கு உதவிடும் நோக்கில் அரசின் அறிவுறுத்தல்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்களை வழங்கியுள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட முதல்நிலை நூலகர் கி. சசிகலாவிடம், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, துணைத் தலைவர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினியை வழங்கினர்.

இதில், மூன்றாம் நிலை நூலகர் கண்ணன் மற்றும் நூலக வாசகர்கள் உடனிருந்தனர்.  நிகழ்வில், நூலகத்துக்கு வந்திருந்த  வாசகர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசம் விநியோகிகக்கப்பட்டன.


Top