28/Jul/2021 05:41:03
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் உணவு வணிகர்கள் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வாசித்த, புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி மொழியான, உணவு வணிகராகிய நான் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய் புண், குடல் புண் மற்றும் புற்று நோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருட்களாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருட்களை தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்து செல்லவோ, விநியோகிக்கவோ, சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தை சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரிவோம் என உளமார உறுதியளிக்கிறேன் என்ற உறுதி ஏற்பு வாசகங்களை அனைத்து உணவு வணிகர்களும் வாசித்து புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் பிரவீன்குமார், மாவட்ட சமூக நுகர்வோர் நல சங்க உறுப்பினர்கள் மற்றும் உணவு வணிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.