27/Jul/2021 03:00:02
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், அம்புக்கோவில் கிராமம் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், அம்புக்கோவில் கிராமம் 2020-21 ஆம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (27.07.2021) நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியர்கவிதா ராமு அம்புக்கோவில் ஊராட்சித் தலைவர் சுமன்காளிதாஸிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் கூறியதாவது: 2020-21 ஆம் ஆண்டிற்கான தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், அம்புக்கோவில் கிராமம் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அம்புக்கோவில் ஊராட்சித் மன்றத் தலைவரை நேரில் வரவழைத்,து அவரிடம் அம்புக்கோவில் கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் நிதியுதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்நிதியின், மூலம், அம்புக்கோவில் கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கத்துடன் வாழும் அம்புக்கோவில் ஊராட்சி பொதுமக்களுக்கும் வாழ்த்துக்ளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், ஆயிஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.